சில மாதங்களுக்கு முன், இங்கு இங்கிலாந்தில் ஓர் எட்டு வயதே நிரம்பிய சிறுமி தனக்குத் தானே தூக்கு மாட்டி இறந்து போனாள். இந்தத் துயர சம்பவத்தை விசாரணை செய்த பொலீஸார் அவளது அறையை சோதனை செய்த போது சில விடியோக்களும் டிவிடிக்களும் சிக்கின. அவற்றில் ஒன்று "Girl Interrupted". இதைப் பார்த்ததும் பொலீஸாருக்கு அதிர்ச்சி. இந்தப் படம் எப்படி இவள் கைக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் வரும் ஒரு கதா பாத்திரம், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறது. பாவம் இந்த சிறுமி. எதைப் பார்த்தாலும் அதை அப்படியே திரும்ப செய்து பார்க்கும் பருவம். இதையும் செய்து பார்த்து மாண்டு போனாள்.
தற்செயலாக நடந்த இறப்பு என்று தீர்மானிக்கப் பட்டிருப்பினும், இது உண்மையிலேயே தற்செயலாக நடந்தது தானா? வயது வந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டால், பொதுவாக அதற்கு அவர்களே பொறுப்பு. ஏனென்றால் அதை அவர்கள் சுயமாக சிந்தித்து அந்த முடிவை நாடியிருக்கிறர்கள். ஆனால் அதுவே சிறார்களாக இருக்கும் போது, அதற்கு அவர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? அவர்களால் எது சரி, எது பிழை, என்ன பின் விளைவுகள் வரப் போகின்றன, இப்படி செய்து பார்க்கலாமா கூடாதா என்று எப்படி சிந்திக்க முடியும்? பெற்றொர்கள் இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
இந்தக் கருத்தையே பிரேத பரிசோதனையாளரும் குறிப்பிடுகிறார். "என்ன விடியோக்கள், டிவிடிக்கள் பிள்ளைகள் பார்ப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள் என்பதில் மிகுந்த அவதானம் தேவை", என்கிறார். இந்தச் சிறுமியினுடைய பெற்றோர் அக்கறை எடுத்து அந்த சிறுமி பார்ப்பதற்குக் கொடுத்த டிவிடியின் தணிப்புப் பத்திரத்தைக் கவனித்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. அந்தந்த வயதிற்கேற்ற பத்திரம் கொண்ட படங்களையே பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். இது குறித்த ஒரு விழிப்புணர்வு பெற்றோரி-டையே இருத்தல் அவசியம். மகள்/ன் விரும்புகிறாள்/ன் என்பதற்காகவே அதன் தணிப்புப் பத்திரத்தைப் பார்க்காமலேயே பிள்ளைகளிடம் கொடுக்கும் பெற்றோர்கள் உண்மையாகவே தங்கள் பிள்ளைகளுக்குத் துரோகம் இழைக்கிறார்கள். நல்லதையும் கெட்டதையும் பிள்ளை-களுக்கு எடுத்துக் கூற தவறியவர்களாவார்கள்.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களிடம் இந்த கெட்ட பழக்கம் குடி கொண்டிருக்கிறது. அவர்கள் விடியோவிலோ டிவிடியிலோ வரும் படங்களை அப்படியே பிள்ளைகளோடு சேர்ந்திருந்து பார்த்து மகிழுவார்கள். அல்லது அதை பார்க்கச் சொல்லிப் பிள்ளைகளை விட்டு விட்டு தத்தமது வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவர். டிவியே ஒரு பிள்ளை பார்த்துக் கொள்ளும் சாதனம் ஆகிவிடுகிறது. அதில் வரும் படங்கள் பிள்ளைகள் பார்க்கக் கூடியனவா என்ற சிந்தனை இவர்களுக்கு எழுவதில்லை.
இங்கு இயங்கும் தமிழ் டிவி நிறுவனங்களும் இந்த தணிக்கைப் பத்திரத்தை சரியாகப் பின்பற்றுவதில்லை. பிரித்தானிய சட்டதிட்டப் படி சிறார்களுக்குப் பொருத்தமில்லாத நிகழ்ச்சிகளையோ படங்களையோ இரவு 9.00 மணிக்கு முன் ஒளிபரப்ப முடியாது. ஆனால், இந்தத் தமிழ் டிவி நிறுவனங்கள் இதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் இதையும் கவனியாமல் பிள்ளைகளை டிவி பார்க்க விடும் போது அவர்கள் பார்க்கக் கூடாத காட்சிகளையும் காண நேரிடுகிறது. இரவு 9.00 மணிக்கு மேல் டிவி பார்க்க விடும் பெற்றோர்களும் இங்கு இருக்கிறார்கள்.
இவ்வாறு டிவி, டிவிடி, இணையம், கைத்தொலைபேசி, விடியோ விளையாட்டுச் சாதனங்கள் என பல வழிகளில் பிள்ளைகள் வன்முறைக் காட்சிகளையோ பாலியல் காட்சிகளையோ பார்த்து விட வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்.