மனம் மயங்குதே

அழகான பொருள்களிலும் அழகான மனிதர்களையும் கண்டால் நமது மனம் ஈர்க்கப் படுகிறதே, ஏன்? அந்த மனதை மயக்கும் அழகு அல்லது ஏதோ ஒன்று என்ன? கொஞ்சம் பெரிய தலை, பெரிய விழிகள் இவற்றைக் கண்டால் போதும், நமது மனம் தன்னிலை இழந்து விடுகிறதே! இவற்றுக்கு அப்படி என்னதான் சக்தி இருக்கிறது, இப்படி எங்களைக் கட்டிப் போட. இதற்கும் ஏதாவது அறிவியல் விளக்கம் உண்டா?

மனதை மயக்கும் சக்தி கொண்டவை என்று இதுவரை கண்டறியப் பட்டவை: கொஞ்சம் பெரிய தலை, பெரிய கொஞ்சம் கீழாக இருக்கின்ற கண்கள், ஆப்பிள் கன்னங்கள், சிறிய சற்று பருத்த கைகள் மற்றும் கால்கள், சிறிய உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள். இவையெல்லாம் ஒரு குழந்தையின் தன்மைகள் அல்லவா? அதுவும் குழந்தை பிறந்தவுடன் இப்படியான தன்மைகளை நன்கு வெளிப்படுத்தும். குழந்தை வளர வளர இந்தத் தன்மைகளில் பல மறைந்து போகும். உடம்புடன் ஒப்பிடும்போது தலையின் அளவு சிறிதாகிவிடும்; நாடி பெருத்துவிடும்; கைகளும் கால்களும் நீண்டு வளர்ந்து விடும். குழந்தைத் தன்மை விட்டுப் போய் விடும்.

அப்படியானால் ஏன் குழந்தைத் தன்மைகள் அந்த அளவுக்கு எங்களை மயக்கி வைக்கின்றன? இதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமல்லவா? பரிணமத்தின் படி யோசித்தால், இப்படி ஒரு மயக்கும் தன்மை எங்கள் மனதில் உண்டாவதால் நமக்கு ஏதோ ஒரு நன்மை இருந்தாக வேண்டுமே! அப்படி என்ன நன்மை இருக்க முடியும்?

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது மூளையின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் பிறக்கும் குழந்தையின் தலையும் பெருக்க ஆரம்பித்தது. ஆனால் பெரிய தலை உள்ள குழந்தைகள் பிறப்பது பெரிய சங்கடமாகிவிட்டது. குழந்தையின் தலையின் அளவு அது வெளியே வரவேண்டிய பாதையின் அளவினால் மட்டுப்படுத்தப் பட்டது. அப்படியானால் இதற்கு என்ன வழி? இயற்கை கண்டுபிடித்த வழி: நமது குழந்தைகளில் மூளை பிறக்கும்போது ஏறத்தாழ 25% மட்டும்தான் வளர்ச்சியடைந்திருக்கும். மிருகங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் மூளை வளர்ச்சி பிறக்கும்போதே ஏறத்தாழ முற்றுப் பெற்றிருக்கும். பிறந்த உடனேயே பல மிருகங்களின் குட்டிகள் தாமாகவே நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. நமது குழந்தைகளோ தானாக நடக்க ஆரம்பிக்க ஏறத்தாழ 12-16 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். பல வருடங்களுக்கு இந்த மனிதக் குழந்தைகள் பெற்றோரையே நம்பி இருக்கின்றனர். வளர்ந்தவர்கள் எவரதும் உதவி இல்லாவிடில் குழந்தைகள் உயிர் தப்பவே முடியாது.

குழந்தைகள் வளர்ந்தோரையே நம்பி இருக்கவேண்டுமென்றால், அத்தனை காலத்திற்கு தம்மை மிகக் கவனமாக பார்த்துக் கொள்வதற்கு வளர்ந்தோரை ஈர்க்கும் சாதனமே மேற்சொன்ன மயங்க வைக்கும் தன்மைகள். இந்த சக்தி மிகப் பலம் வாய்ந்தது. அதனால் தான் எமது குழந்தைகள் அல்லாமல் வேறு எந்தக் குழந்தையைக் கண்டோமென்றால் கூட, அதன் மீது உடனடியாக ஒரு பாசமும் பரிவும் ஏற்படுகிறது. மயக்கும் தன்மைகளைக் கூடுதலாகக் கொண்ட பிள்ளைகளை நாம் கூடுதலாகக் கவனித்து கொள்கிறோமாம் - இத் தன்மைகளை குறைவாகக் கொண்ட பிள்ளைகளோடு ஒப்பிடும்போது! இந்தப் பழக்கம் பரிணாம வளர்ச்சியில் எமது உயிரணுக்களிலேயே இது இருப்பதாக நம்பப்படுகிறது. குழந்தைகளும் பிறந்த உடனேயே அழகான முகங்களைத் தேடிப் பார்ப்பதும் இதனால்தான். அழகான மாணாக்கர்கள் ஆசிரியர்களின் கவனத்தை இலகுவாக ஈர்ப்பதும் இதனால்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சக்தியின் காரணமாக குழந்தைகளின் தன்மைகள் கொண்ட வளர்ந்தோரைக் கண்டும் நாம் ஈர்க்கப் படுகிறோம். இத்தன்மைகள் கொண்ட மிருகங்களிலும், படங்களிலும் கூட நாம் அன்பு செலுத்துகிறோம். வோல்ட் டிஸ்னி இத்தனை வருடங்களாக இதை வைத்தே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் அல்லவா?

(படங்கள் இணையத்திலிருந்து)

17 :

  1. அட்டகாசமான யோஜனை.
    இன்று காலை ஒரு யோஜனை...குழந்தை ஒருவரின் தோளில் தூங்கும் போது இருக்கும் அமைதியான முகம் பலரை கவர்ந்திருக்கும்,அது எதனால்????? அப்படி யோசித்து மறந்து போய் இந்த பதிவை இப்போது படித்த போது,மிக மிக மகிழ்ந்தேன்.

  2. இப்படி எழுதி எங்கள் உள்ளே இருக்கும் பல ? வுகளுக்கு பதில் சொன்ன உங்களுக்கு குழந்தைகள் சார்பாக ஒரு பெரிய "முத்தா".

  3. நன்றி குமார், "முத்தாவுக்கும்" சேர்த்து :-))).

    வைசா

  4. நல்ல பிரயோசனமான பதிவு!

    இது போலவே ஏன் காய்கள் பழுத்தவுடன் இனிக்கிறது மற்றும் வாசனையாக இருக்கிறது?

    அது போலவே மலர் நன்கு மலர்ந்தவுடன் ஏன் கவர்ச்சியூட்டும் வண்ணங்களிலும், வாசனையுடனும் இருக்க வேண்டும். இதெல்லாம் பரிணாம விளையாட்டுக்களில் ஒரு அங்கம்தானோ...

    நன்றி, வைசா.

  5. ரொம்ப நல்லா இருக்கா வைசா... intresting

  6. ஹ்ம்ம்...பிறந்த குழந்தை தூங்கும் போது சிரிக்குமே...அதை விட அழகான விஷய்ம் ஒன்றும் இல்லை.. அதுக்கு ஏதாவது விளக்கம்???..:-))

  7. எப்படித்தான் இப்படி ஒவ்வொரு தலைப்பா அலசி ஆராய்ந்து பதிவு போடறீங்களோ.. ஆனா ரொம்ப சுவாரசியமா இருக்கு. இதைப் பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன் படிச்சப்ப தெரிஞ்சிக்கிட்டது:

    நீங்க சொன்ன குணாதிசயங்களோட, சற்றே அகலமான நெற்றியும், சற்றே தள்ளித்தள்ளி உள்ள கண்களும் இருக்கும் (broad forehead, wideset eyes) யோசிச்சுப் பார்த்தீங்கன்னா இது மனிதக் குழந்தைக்கும் பொருந்தும், நீங்க படம் போட்டிருக்கும் குரங்குக்குட்டிக்கும் பொருந்தும், ஏன், யானைக்குட்டிக்கும் பொருந்தும் :-)

    இந்த குணாதிசங்களெல்லாம் சேர்ந்து நம் உடம்பில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி ஆக்சிடோசின் (oxytocin) எனும் ஹார்மோனை சுரக்கவைக்கும். ஆக்சிடோசினை "cuddle chemical" என்பார்கள். குழந்தையைப் பார்த்ததும் தூக்கிக் கொஞ்ச வைப்பது ஆக்சிடோசின் தான். அந்த நாக்குட்டி ரொம்ப ரொம்ப கியூட்டா இருக்கு அச்சோ அதை அப்படியே தூக்கி மூக்கோட மூக்கு உரசத் தோணுதுன்னு நினைக்கும்போது அங்கே வேலை பார்ப்பது நம்ம ஆக்சிடோசின் தான்!

  8. தெகா,

    நீங்களே பதிலையும் கூறிக் கேள்வியையும் கேட்டிருக்கிறீர்கள் :-).

    // இது போலவே ஏன் காய்கள் பழுத்தவுடன் இனிக்கிறது மற்றும் வாசனையாக இருக்கிறது? //

    பழம் என்று மரங்கள் உருவாக்குவதே பெரும்பாலும் அதனுள்ளிருக்கும் தமது விதைக்காகத்தான். அந்தப் பழம் யாரையும் ஈர்க்காததாக இருந்தால் அதன் விதை அப்படியே பழுத்த இடத்திலிருந்து கீழே விழுந்து முளைக்கும். இதனால் மரத்திற்குப் பெரியளவு பயனில்லை. பக்கத்திலேயே வளர்ந்தால், நீர், உணவு மற்றும் சூரிய ஒளிக்குப் போட்டி. தனக்கே ஒரு கட்டத்தில் புதிய மரம் சவாலாகலாம் என்பதைவிட தூர இடங்களுக்குப் பரவுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும். பழங்கள் மணமுள்ளவையாகவும் சுவையுள்ளவையாகவும் இருப்பதால், மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் இப்பழங்களை உண்பதற்காக தூர இடங்களுக்கு எடுத்துச் சென்று விதைகளைப் போடும் போது மரங்கள் அவ்வாறு தூர இடங்களுக்குப் பரவுவதற்கு்கு வாய்ப்பு உண்டாகிறது! சிறிய பழங்களைப் பறவைகள் அப்படியே விழுங்கிவ்டும். பின்னர் அவை எங்காவது பறந்து சென்று அங்கு எச்சமிடும்போது விதை அந்த இடத்தில் விழுந்து முளைக்கும். பரிணாம வளர்ச்சியில் மரங்கள் இனவிருத்திக்கென்று தங்களுக்கென ஏற்படுத்திக் கொண்ட உத்திதான்்தான் பழங்கள்.

    வைசா

  9. // அது போலவே மலர் நன்கு மலர்ந்தவுடன் ஏன் கவர்ச்சியூட்டும் வண்ணங்களிலும், வாசனையுடனும் இருக்க வேண்டும். //

    இதுவும் மரங்களது இனவிருத்திக்காகத்தான்.
    எப்படி? ஒவ்வொரு பூவிலும் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் உண்டு. மகரந்தம் கொண்ட ஆண் பகுதி பூக்களின் வெளிப் புறத்திலும் பெண்பகுதி பூக்களின் உள்பகுதியிலும் இருக்கும். கவர்ச்சிகரமான நிறமும், மயக்கும் வாசனையும் தேனீக்கள், வண்டினங்கள், சில சிறிய பறவைகளை (உதாரணமாக, humming bird) பூக்கள் ஈர்க்கும். இவற்றின் வருகைக்குப் பரிசாக பூக்களினுள் ஒருவகை தேன் சுரந்திருக்கும். பூக்களினுள் தேனீக்கள் நுழையும் போது அவற்றின் உடம்பில் மகரந்தம் ஒட்டிக் கொள்ளும். இதே தேனீக்கள் இன்னொரு பூவினுள் போகும்போது ஏற்கனவே அதன் மீதுள்ள மகரந்தம் இந்தப் பூவின் பெண்பகுதியில் விழுந்து (அல்லது ஒட்டிக் கொண்டு) விடும். அப்படி நடந்தால் கருக்கட்டல் நடைபெறும். அது பின்னர் காயாகி பழமாகி.....

    இந்தக் கருக்கட்டலை வேறொரு மரத்தோடு செய்வதற்காகத் தான் மரங்கள் தேனீக்கள், வண்டினங்களின் துணையை இவ்வாறு நாடுகின்றன.

    நன்றி தெகா.

    வைசா்

  10. // ஹ்ம்ம்...பிறந்த குழந்தை தூங்கும் போது சிரிக்குமே...அதை விட அழகான விஷய்ம் ஒன்றும் இல்லை.. அதுக்கு ஏதாவது விளக்கம்???..:-)) //

    இதற்கும் மனதை மயங்க வைக்கும் தன்மைகளுக்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. பிறந்த குழந்தை தூங்கும் போது சிரிப்பதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார்கள்: ஒன்று அது ஏதோ கனவு காண்கிறது என்றும் அதன் பிரதிபலிப்பாகச் சிரிக்கிறது என்கிறார்கள். இண்டாதாவது, வயிற்றுக்குள் உருவாகும் வாயு பிரியும்போது அதனால் ஏற்படும் நிம்மதியின் காரணமாகச் சிரிப்பதாகவும் கூறப்படுகிறது. :-))))

    நன்றி மங்கை.

    வைசா

  11. வைசா,
    நல்ல பதிவு. மிக்க நன்றி.

  12. நன்றி சேதுக்கரசி. சரியாகச் சொன்னீர்கள். இந்த ஆக்சிடோசின் வேறொரு சந்தர்ப்பத்திலும் முக்கியமாகப் பயன்படுகிறது.

    வைசா

  13. நன்றி வெற்றி.

    வைசா

  14. //இந்த ஆக்சிடோசின் வேறொரு சந்தர்ப்பத்திலும் முக்கியமாகப் பயன்படுகிறது.//

    ஆமாம் ;-)

    அப்புறம்.. நாய்க்குட்டி என்பதில் தட்டச்சுப்பிழை செய்திருக்கிறேன் முந்தைய பின்னூட்டத்தில்.

  15. இந்த ஈர்ப்பு மட்டும் இல்லைன்னா உலகத்தில் யாருக்குமே யாரையுமே பிடிக்காமப்போயிரும்.

    எனக்கு அடுத்த வீட்டுக்குழந்தைகளைக் கொஞ்சப் பிடிக்கும்.
    அழுதா உடனே அவுங்க அம்மாகிட்டே கொடுத்துறலாம்:-)

  16. வாங்க துளசி டீச்சர்.

    // எனக்கு அடுத்த வீட்டுக்குழந்தைகளைக் கொஞ்சப் பிடிக்கும்.
    அழுதா உடனே அவுங்க அம்மாகிட்டே கொடுத்துறலாம்:-)
    //

    பொறுப்பில்லாத இலவச சந்தோஷம் வேணுமா? :-))))

    வைசா

  17. சுவாரஸ்யமான பதிவுகள்.

    எந்தவிதமான அழகிலும் லயித்துவிடும் நான் இன்று உங்கள் பதிவுகளில் லயித்து விட்டேன்.
    என்னிடமிருந்த உங்களது ஒரு கட்டுரை மூலம்
    http://www.manaosai.com/index.php?option=com_wrapper&view=wrapper&Itemid=81இன்று அதிகாலையில் உங்கள் பதிவுக்கு வந்த நான் ஒவ்வொன்றாக வாசித்து வாசித்து வியந்தேன்.

    ஆய்வுகள், விளக்கங்கள், அதை சுவாரஸ்யமாக எழுதும் தன்மை... என்று மிக அருமை.