நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்

பாரதிக்குத் தெரியாததா என்ன? நோவு இல்லாத வாழ்வல்லவா கேட்கிறார். தலைவலி, நெங்சுவலி, முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி, காதுவலி, கண்வலி, கால் வலி, முழங்கால் வலி, கை வலி, குத்து வலி, திருகு வலி, உடல் வலி. குத்து, நமைச்சல், எரிவு. அப்பப்பா! வலிகளில் தான் எத்தனை வகை! இத்தனையையும் தாங்கிக் கொண்டு எப்படித்தான் வாழ்கிறோமோ? ஆனால் இவைகளில் ஏதோ ஒன்றாவது நாளாந்தம் ஒவ்வொருவருக்கும் வந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் அப்படி? நோவே இல்லாத வாழ்வு இருக்க முடியாதா? வலியென்று வந்து விட்டால் அதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று துடிக்கிறோம் அல்லவா? இதுவேதான் வலிவருவதற்கும் ஒருவகையில் காரணமாகிறது. அதாவது வலி என்று நமது மூளை உணர்ந்து கொள்வதற்கு இது காரணமாகிறது. எப்படி?

முதலில் வலி எப்படி உருவாகிறது என்று பார்ப்போம். முள்ளந்தண்டு வடத்திலிருந்து தோல், தசைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு நரம்புகள் தொடுப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நரம்புகளின் முடிவுகளில் சில தொடுகை, அதிர்வு, குளிர், வெப்பம் போன்றவற்றை உணரக்கூடியன. ஏனையவை உடலின் திசுக்களின் அழிவை அல்லது வரப்போகும் அழிவை உணரக்கூடியன. இந்த இரண்டாவது வகை நரம்புகள் அதிகம் காயம்படக் கூடிய இடங்களில், உதாரணமாக கை கால் விரல்களில், காணப்படுகின்றன. ஆபத்தை இவை உணரும்போது, மின் அலைகளை நரம்புகளினூடாக அனுப்புகின்றன. வலி பயங்கரமானதானால், மின் அலைத் தகவல்கள் உடனடியாக அனுப்பப்படும். ஒவ்வொரு கணத்திலும் லட்சக்கணக்கான தகவல்கள் இவ்வாறு நரம்புகளினூடாக முள்ளந்தண்டு வடத்திற்கு வந்து சேர்கின்றன.

இந்தத் தகவல்களெல்லாம் மூளையை நேரடியாக வந்து சேர்ந்தால் அவற்றைப் புரிந்து கொள்வதிலேயே மூளை தனது நேரத்தைச் செலவிட நேரிடும். ஆனால், இங்குதான் முள்ளந்தண்டு வடத்திலுள்ள சிறப்பு நரம்புக்கூறுகள் தமது பணியைச் செய்கின்றன. கடும் வலிகளை அறிவுறுத்தும் தகவல்களை உடனடியாக மூளைக்குப் போக வழிவிடுவார்கள் இந்த துவாரபாலகர்கள். ஆனால், சும்மா வெறுமனே ஏதோ காலில் படுகிறது என்பது போன்ற தகவல்களை இந்த நரம்புக் கூறுகள் அங்கேயே தடுத்து நிறுத்தி விடுகின்றன.

மூளை தனக்குக் கிடைக்கும் தகவல்களை மூன்று வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்புகிறது. அந்தப் பகுதிகளிலிருந்து அந்த வலிக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தீர்மானிக்கப் படுகிறது. கையைச் சுடுநீருனுள் வைத்துவிட்டொமென்றால் அதில் நாம் உணரும் வலி காரணமாக நாம் உடனடியாகக் கையை எடுத்துவிடுகிறொம் அல்லவா? மேலே உள்ள முறைப்படி தான் தகவல்கள் மூளையை அடைந்து கையை உடனடியாக சுடுநீரிலிருந்து எடுத்துவிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப் பட்டது. வலி என்பது இருப்பதற்கான காரணமும் இதுவே. வலி என்பது உடலின் ஏதோ ஒருபகுதி காயப்பட்டுவிட்டது அல்லது காயப்படப்போகிறது என்பதை எமக்கு உணர்த்தவே பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கிறது. எமது வாழ்விற்கு இது மிக முக்கியமானது.

உங்களுக்குக் கடும் தலைவலி என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும் உங்கள் வேலையையும் செய்து முடித்தாக வேண்டும். ஆகையால் உங்கள் முழு கவனத்தையும் வேலையில் செலுத்த முயல்கிறீர்கள். இது சாத்தியமா? தலைவலி போன்ற கடுமையான வலிகளுடன் வேறு விடயங்களில் கவனம் செலுத்துவது மிகக் கடினம். ஏன்? மூளையின் ஏதோ ஒருபகுதிதான் இவ்வாறு நமது கவனத்தைக் குழப்புவதாக இருக்க வேண்டும். அண்மையில் அமெரிக்காவில் சில அறிவியலாளர்கள் இந்தப் பகுதியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ஒருவகை காந்த அதிர்வுப் படமாக்கல் முறையை வைத்து அவர்கள் செய்த சோதனைகளில் ஞாபக சக்தியோடு பின்னிப் பிணைந்திருக்கும் lateral occipital complex என்ற பகுதிதான் ஞாபகத்தோடு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்குப் பயன்படும் அதேவேளையில், வலி எற்படும் போது பாதிக்கவும் செய்கிறது. அதனால் தான் வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும், வலி இருக்கின்றபோது மூளையின் rostral anterior cingulate cortex என்ற பகுதியினூடாக வலி இந்த LOC பகுதியைப் பாதிக்கிறது. வலி இல்லாதபோது, LOC பகுதி மூளையின் வேறொரு பகுதியிலிருந்து சமிக்ஞைகளைப் பெறுகிறதாம்.

இன்னுமொரு விடயமும் கவனிக்கத்தக்கது. வலியும் வலி வந்துவிடுமோ என்ற பயமும் வெவ்வேறு. ஆனால், இவற்றை உணரும் மூளையின் பகுதிகள் இரண்டும் அருகருகே இருக்கின்றன. இதுவும் பரிணாம வளர்ச்சியில் முக்கியமானது. வலி வந்துவிடுமோ என்ற பயமும் வலியைத் தரக்கூடிய ஆபத்தான நிலைமைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றும் அல்லவா?

இப்போது சொல்லுங்கள்: வலியில்லாத வாழ்க்கை வேண்டுமா?

(படங்கள் இணையத்திலிருந்து)

4 :

  1. என்னது 1995 யில் இருந்து ஆராய்சி பண்ணி இப்பத்தான் முடிவு (நிஜ முடிவா?) தெரிந்ததா?
    கடைசி படத்தில் அந்த வருடம் இருக்கு.

  2. வைசா,

    Excellent Post!

  3. வைசா,
    மிகவும் பயனுள்ள கட்டுரை. எளிமையான தமிழில் இலகுவில் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

  4. குமார்,

    முடிவுகள் என்னவோ நிஜம்தான். ஆராய்ச்சி நடந்ததும் அண்மையில் தான். படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த ஆராய்ச்சி சம்பந்தமான நேரடிப் படங்கள் கிடைக்கவில்லை. MRI செய்யப்பட்ட படங்கள் என்றவகையில் அவற்றை இந்தப் பதிவில் சேர்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

    நன்றி குமார், சிவபாலன், வெற்றி.

    வைசா