நாயா? குதிரையா?

பின்னங்காலில் எழுந்து நின்றால் 6 அடி 5 அங்குலம் (ஏறத்தாழ 2 மீட்டர்) இருக்கும்! இதன் நிறையோ 276 இராத்தல் (125 கிலோ)! சாதாரணமாக இது எழுந்து நின்றால் ஏறத்தாழ 50 அங்குலங்கள் (1.27 மீட்டர்) இருக்குமாம் - பாதத்திலிருந்து தலை வரை. மார்பு அளவு 59 அங்குலங்கள் (1.5 மீட்டர்). 29 அங்குல (74 செண்டிமீட்டர்) கழுத்து. குதிரைகளுக்குப் பயன்படுத்தப்படும் மேலங்கிகளைத்தான் குளிர், மழைக்காலத்தில் இதற்கும் பயன்படுத்த வேண்டும். இதன் பாதம் ஒரு சாப்பாடுத் தட்டளவு பெரியது.
உண்மையிலேயே ஓர் அரக்கன் தான். இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பாரிய நாய்தான் பிரிட்டனில் மிகப் பெரியதாம்.

பெயர்: ஸாம்சன்.

இதற்குத் தீனி போட மட்டும் மாதம் 60 பவுண்டுகள் செலவாகிறதாம். ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் இரண்டு மைல் நடை கூட்டிச் செல்ல வேண்டுமாம். இந்த நாயைக் ஆறு மாதக்குட்டியாக வாங்கியபோதே 226 இராத்தல் நிறை இதற்கு. இவன் எப்படி உருவானான்? நியூஃபண்ட்லாண்ட் இன அப்பாவுக்கும் கிரேட் டேய்ன் இன அம்மாவுக்கும் நடந்த கள்ளக் காதலில் வந்து உதித்தவன் இவன். இப்போது இவனுக்கு மூன்று வயதாகிறது.

நியூஃபண்ட்லாண்ட் இன நாய்கள் பெயர் சுட்டுவது போல கனடாவில் 1700களில் உருவாயின. பெரிய அளவான இந்த நாய்கள் பண்ணைகளில் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டன. என்னென்ன வேலைகளை இவை செய்ய வல்லன? பாதுகாத்தல், மாடுகளை மான்களை ஒன்றாக ஓரிடத்தில் ஒடுங்கவைத்தல்,
சிறிய வண்டிகளை இழுத்தல், வேட்டையாடுதல், நீரினுள்ளிருந்தோ மலைகளிலோ ஆபத்திலிருந்து மனிதரைக் காப்பாற்றுதல் போன்றவை. கிரேட் டேய்ன் இன நாய்கள் 1400களில் ஜேர்மனியில் தோன்றின (பெயரைப் பார்த்து டென்மார்க்கிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று எண்ணாதீர்கள்). மிகப் பெரியளவு வளரக்கூடிய நாய்கள் இவை. நியூஃபண்ட்லாண்ட் இன நாய்கள் செய்யக்கூடிய அத்தனை பணிகளையும் இந்த கிரேட் டேய்ன் இன நாய்களும் செய்யக்கூடியன. ஆக இந்த இரண்டும் சேர்ந்து உருவான இந்த ஸாம்சன் இத்தனை பாரிய அளவில் வளர்ந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

இவ்வளவுக்கும் இவன் நல்லவனாம். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதாவன். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை: இவனது உறட்டை ஒலியைத் தாங்க முடியவில்லையாம்.நியூஃபண்ட்லாண்ட் இன நாய்கிரேட் டேய்ன் இன நாய்













நியூஃபண்ட்லாண்ட் இன நாய் மற்றும் கிரேட் டேய்ன் இன நாய்

படங்கள்: இணையத்திலிருந்து

மனம் மயங்குதே

அழகான பொருள்களிலும் அழகான மனிதர்களையும் கண்டால் நமது மனம் ஈர்க்கப் படுகிறதே, ஏன்? அந்த மனதை மயக்கும் அழகு அல்லது ஏதோ ஒன்று என்ன? கொஞ்சம் பெரிய தலை, பெரிய விழிகள் இவற்றைக் கண்டால் போதும், நமது மனம் தன்னிலை இழந்து விடுகிறதே! இவற்றுக்கு அப்படி என்னதான் சக்தி இருக்கிறது, இப்படி எங்களைக் கட்டிப் போட. இதற்கும் ஏதாவது அறிவியல் விளக்கம் உண்டா?

மனதை மயக்கும் சக்தி கொண்டவை என்று இதுவரை கண்டறியப் பட்டவை: கொஞ்சம் பெரிய தலை, பெரிய கொஞ்சம் கீழாக இருக்கின்ற கண்கள், ஆப்பிள் கன்னங்கள், சிறிய சற்று பருத்த கைகள் மற்றும் கால்கள், சிறிய உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள். இவையெல்லாம் ஒரு குழந்தையின் தன்மைகள் அல்லவா? அதுவும் குழந்தை பிறந்தவுடன் இப்படியான தன்மைகளை நன்கு வெளிப்படுத்தும். குழந்தை வளர வளர இந்தத் தன்மைகளில் பல மறைந்து போகும். உடம்புடன் ஒப்பிடும்போது தலையின் அளவு சிறிதாகிவிடும்; நாடி பெருத்துவிடும்; கைகளும் கால்களும் நீண்டு வளர்ந்து விடும். குழந்தைத் தன்மை விட்டுப் போய் விடும்.

அப்படியானால் ஏன் குழந்தைத் தன்மைகள் அந்த அளவுக்கு எங்களை மயக்கி வைக்கின்றன? இதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமல்லவா? பரிணமத்தின் படி யோசித்தால், இப்படி ஒரு மயக்கும் தன்மை எங்கள் மனதில் உண்டாவதால் நமக்கு ஏதோ ஒரு நன்மை இருந்தாக வேண்டுமே! அப்படி என்ன நன்மை இருக்க முடியும்?

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது மூளையின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் பிறக்கும் குழந்தையின் தலையும் பெருக்க ஆரம்பித்தது. ஆனால் பெரிய தலை உள்ள குழந்தைகள் பிறப்பது பெரிய சங்கடமாகிவிட்டது. குழந்தையின் தலையின் அளவு அது வெளியே வரவேண்டிய பாதையின் அளவினால் மட்டுப்படுத்தப் பட்டது. அப்படியானால் இதற்கு என்ன வழி? இயற்கை கண்டுபிடித்த வழி: நமது குழந்தைகளில் மூளை பிறக்கும்போது ஏறத்தாழ 25% மட்டும்தான் வளர்ச்சியடைந்திருக்கும். மிருகங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் மூளை வளர்ச்சி பிறக்கும்போதே ஏறத்தாழ முற்றுப் பெற்றிருக்கும். பிறந்த உடனேயே பல மிருகங்களின் குட்டிகள் தாமாகவே நடக்க ஆரம்பித்துவிடுகின்றன. நமது குழந்தைகளோ தானாக நடக்க ஆரம்பிக்க ஏறத்தாழ 12-16 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். பல வருடங்களுக்கு இந்த மனிதக் குழந்தைகள் பெற்றோரையே நம்பி இருக்கின்றனர். வளர்ந்தவர்கள் எவரதும் உதவி இல்லாவிடில் குழந்தைகள் உயிர் தப்பவே முடியாது.

குழந்தைகள் வளர்ந்தோரையே நம்பி இருக்கவேண்டுமென்றால், அத்தனை காலத்திற்கு தம்மை மிகக் கவனமாக பார்த்துக் கொள்வதற்கு வளர்ந்தோரை ஈர்க்கும் சாதனமே மேற்சொன்ன மயங்க வைக்கும் தன்மைகள். இந்த சக்தி மிகப் பலம் வாய்ந்தது. அதனால் தான் எமது குழந்தைகள் அல்லாமல் வேறு எந்தக் குழந்தையைக் கண்டோமென்றால் கூட, அதன் மீது உடனடியாக ஒரு பாசமும் பரிவும் ஏற்படுகிறது. மயக்கும் தன்மைகளைக் கூடுதலாகக் கொண்ட பிள்ளைகளை நாம் கூடுதலாகக் கவனித்து கொள்கிறோமாம் - இத் தன்மைகளை குறைவாகக் கொண்ட பிள்ளைகளோடு ஒப்பிடும்போது! இந்தப் பழக்கம் பரிணாம வளர்ச்சியில் எமது உயிரணுக்களிலேயே இது இருப்பதாக நம்பப்படுகிறது. குழந்தைகளும் பிறந்த உடனேயே அழகான முகங்களைத் தேடிப் பார்ப்பதும் இதனால்தான். அழகான மாணாக்கர்கள் ஆசிரியர்களின் கவனத்தை இலகுவாக ஈர்ப்பதும் இதனால்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சக்தியின் காரணமாக குழந்தைகளின் தன்மைகள் கொண்ட வளர்ந்தோரைக் கண்டும் நாம் ஈர்க்கப் படுகிறோம். இத்தன்மைகள் கொண்ட மிருகங்களிலும், படங்களிலும் கூட நாம் அன்பு செலுத்துகிறோம். வோல்ட் டிஸ்னி இத்தனை வருடங்களாக இதை வைத்தே கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் அல்லவா?

(படங்கள் இணையத்திலிருந்து)

நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்

பாரதிக்குத் தெரியாததா என்ன? நோவு இல்லாத வாழ்வல்லவா கேட்கிறார். தலைவலி, நெங்சுவலி, முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி, காதுவலி, கண்வலி, கால் வலி, முழங்கால் வலி, கை வலி, குத்து வலி, திருகு வலி, உடல் வலி. குத்து, நமைச்சல், எரிவு. அப்பப்பா! வலிகளில் தான் எத்தனை வகை! இத்தனையையும் தாங்கிக் கொண்டு எப்படித்தான் வாழ்கிறோமோ? ஆனால் இவைகளில் ஏதோ ஒன்றாவது நாளாந்தம் ஒவ்வொருவருக்கும் வந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் அப்படி? நோவே இல்லாத வாழ்வு இருக்க முடியாதா? வலியென்று வந்து விட்டால் அதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று துடிக்கிறோம் அல்லவா? இதுவேதான் வலிவருவதற்கும் ஒருவகையில் காரணமாகிறது. அதாவது வலி என்று நமது மூளை உணர்ந்து கொள்வதற்கு இது காரணமாகிறது. எப்படி?

முதலில் வலி எப்படி உருவாகிறது என்று பார்ப்போம். முள்ளந்தண்டு வடத்திலிருந்து தோல், தசைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு நரம்புகள் தொடுப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நரம்புகளின் முடிவுகளில் சில தொடுகை, அதிர்வு, குளிர், வெப்பம் போன்றவற்றை உணரக்கூடியன. ஏனையவை உடலின் திசுக்களின் அழிவை அல்லது வரப்போகும் அழிவை உணரக்கூடியன. இந்த இரண்டாவது வகை நரம்புகள் அதிகம் காயம்படக் கூடிய இடங்களில், உதாரணமாக கை கால் விரல்களில், காணப்படுகின்றன. ஆபத்தை இவை உணரும்போது, மின் அலைகளை நரம்புகளினூடாக அனுப்புகின்றன. வலி பயங்கரமானதானால், மின் அலைத் தகவல்கள் உடனடியாக அனுப்பப்படும். ஒவ்வொரு கணத்திலும் லட்சக்கணக்கான தகவல்கள் இவ்வாறு நரம்புகளினூடாக முள்ளந்தண்டு வடத்திற்கு வந்து சேர்கின்றன.

இந்தத் தகவல்களெல்லாம் மூளையை நேரடியாக வந்து சேர்ந்தால் அவற்றைப் புரிந்து கொள்வதிலேயே மூளை தனது நேரத்தைச் செலவிட நேரிடும். ஆனால், இங்குதான் முள்ளந்தண்டு வடத்திலுள்ள சிறப்பு நரம்புக்கூறுகள் தமது பணியைச் செய்கின்றன. கடும் வலிகளை அறிவுறுத்தும் தகவல்களை உடனடியாக மூளைக்குப் போக வழிவிடுவார்கள் இந்த துவாரபாலகர்கள். ஆனால், சும்மா வெறுமனே ஏதோ காலில் படுகிறது என்பது போன்ற தகவல்களை இந்த நரம்புக் கூறுகள் அங்கேயே தடுத்து நிறுத்தி விடுகின்றன.

மூளை தனக்குக் கிடைக்கும் தகவல்களை மூன்று வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்புகிறது. அந்தப் பகுதிகளிலிருந்து அந்த வலிக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தீர்மானிக்கப் படுகிறது. கையைச் சுடுநீருனுள் வைத்துவிட்டொமென்றால் அதில் நாம் உணரும் வலி காரணமாக நாம் உடனடியாகக் கையை எடுத்துவிடுகிறொம் அல்லவா? மேலே உள்ள முறைப்படி தான் தகவல்கள் மூளையை அடைந்து கையை உடனடியாக சுடுநீரிலிருந்து எடுத்துவிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப் பட்டது. வலி என்பது இருப்பதற்கான காரணமும் இதுவே. வலி என்பது உடலின் ஏதோ ஒருபகுதி காயப்பட்டுவிட்டது அல்லது காயப்படப்போகிறது என்பதை எமக்கு உணர்த்தவே பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கிறது. எமது வாழ்விற்கு இது மிக முக்கியமானது.

உங்களுக்குக் கடும் தலைவலி என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும் உங்கள் வேலையையும் செய்து முடித்தாக வேண்டும். ஆகையால் உங்கள் முழு கவனத்தையும் வேலையில் செலுத்த முயல்கிறீர்கள். இது சாத்தியமா? தலைவலி போன்ற கடுமையான வலிகளுடன் வேறு விடயங்களில் கவனம் செலுத்துவது மிகக் கடினம். ஏன்? மூளையின் ஏதோ ஒருபகுதிதான் இவ்வாறு நமது கவனத்தைக் குழப்புவதாக இருக்க வேண்டும். அண்மையில் அமெரிக்காவில் சில அறிவியலாளர்கள் இந்தப் பகுதியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ஒருவகை காந்த அதிர்வுப் படமாக்கல் முறையை வைத்து அவர்கள் செய்த சோதனைகளில் ஞாபக சக்தியோடு பின்னிப் பிணைந்திருக்கும் lateral occipital complex என்ற பகுதிதான் ஞாபகத்தோடு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்குப் பயன்படும் அதேவேளையில், வலி எற்படும் போது பாதிக்கவும் செய்கிறது. அதனால் தான் வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் போகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும், வலி இருக்கின்றபோது மூளையின் rostral anterior cingulate cortex என்ற பகுதியினூடாக வலி இந்த LOC பகுதியைப் பாதிக்கிறது. வலி இல்லாதபோது, LOC பகுதி மூளையின் வேறொரு பகுதியிலிருந்து சமிக்ஞைகளைப் பெறுகிறதாம்.

இன்னுமொரு விடயமும் கவனிக்கத்தக்கது. வலியும் வலி வந்துவிடுமோ என்ற பயமும் வெவ்வேறு. ஆனால், இவற்றை உணரும் மூளையின் பகுதிகள் இரண்டும் அருகருகே இருக்கின்றன. இதுவும் பரிணாம வளர்ச்சியில் முக்கியமானது. வலி வந்துவிடுமோ என்ற பயமும் வலியைத் தரக்கூடிய ஆபத்தான நிலைமைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றும் அல்லவா?

இப்போது சொல்லுங்கள்: வலியில்லாத வாழ்க்கை வேண்டுமா?

(படங்கள் இணையத்திலிருந்து)

லண்டன் 2012 - ஒலிம்பிக் சின்னம்

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே லண்டனின் பாதாள ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. அப்படி ஒரு பாரிய சோகத்துடன் தான் இந்த லண்டன் ஒலிம்பிக் பயணம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு 240 கோடி பவுண்டுகள் தேவை என்று கணக்கு வைத்து அரசாங்கமும் இதற்கு ஒப்புக்கொண்டு அதை விண்ணப்பத்தில் இவர்கள் போட்டு லண்டன் தெரிவாகிவிட்டது.


ஆனால் குறைந்தது 330 கோடி பவுண்டுகளாவது தேவை என்று இப்போது அரசாங்கமே ஒப்புக்கொண்டுவிட்டது. பத்திரிகைகளோ இந்தப் போட்டிகள் நடத்தி முடிக்கப்படுகின்றபோது செலவு 1000 கோடி பவுண்டுகளைத் தாண்டிவிடும் என்கின்றன.


அதை விடுங்கள். இந்த நிலையில் சுமார் 4 லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஒரு சின்னத்தை வடிவமைத்துள்ளார்கள். ஒரு சின்னத்திற்கு இவ்வளவு செலவா என்பதை விட்டுத் தள்ளுங்கள். அப்படி இவ்வளவு செலவில் மிக அழகான் சின்னம் வெளிவந்திருக்கிறதா என்றால்.....?


இந்தச் சின்னத்தைக் கிண்டல் செய்து ஒரு பத்திரிகையில் அதன் வாசகர்கள் உருவாக்கிய சின்னங்களில் சில இதோ:



உணர்வின் பிரதிபலிப்பு




பிரிட்டன் வரைபடம்!




பாலைவனத்தில் ஒட்டகம்




பேஸ்பால் ஆட்டக்காரர்




நீச்சலடிக்கும் வாத்துகள்




காண்டாமிருகம்



இன்னுமொரு பத்திரிகை இதற்கு மாற்றாக ஒரு சின்னத்தை வடிவமைக்கும்் போட்டி ஒன்றை நடத்தி மாற்றுச் சின்னம் ஒன்றைத் தெரிந்தெடுத்துள்ளது. வெற்றி பெற்றவை இவை:




படங்கள் நன்றி: thelondonpaper, London Lite

புதிய வெம்பிளி ஸ்டேடியம் - படங்களுடன்

ஒரு வழியாக புதிய வெம்பிளி அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 1923ம் ஆண்டு வெம்பிளியில் கட்டப்பட்ட அரங்கம் 2000ம் ஆண்டு மூடப்பட்டு, 2002ம் ஆண்டில் இடித்தழிக்கப் பட்டது. 2005இலேயே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த அரங்கம் இப்போதுதான் முடிக்கப்பட்டுள்ளது. மொத்தச் செலவு? 75,70,00,000 பவுண்டுகள். ஆஸ்திரேலிய கட்டிட நிறுவனமான மல்ட்டிப்ளெக்ஸ் இதை நிர்மாணித்து முடித்திருக்கிறது.


கடந்த மாதம் 17ம் தேதி வெம்பிளி மக்களில் 60,000 பேர் மைதானத்துக்குள்ளே அநுமதிக்கப் பட்டனர். அடுத்ததாக இங்கிலாந்து இளம் கால்பந்து வீரர்கள் (21 வயதிற்குக் குறைந்தோர்) பங்குபற்றும் பந்தயம் ஒன்று நடந்தது. இனி கால்பந்து சங்கக் கோப்பை இறுதிப் பந்தயம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. முதலாவது சர்வதேச பந்தயமாக இங்கிலாந்து-பிரேசில் ஆட்டம் ஜூன் முதலாம் தேதியன்று நடைபெறவுள்ளது.


இதனது சிறப்பம்சம் இதனது பிரமாண்ட வளைவு. 133 மீட்டர்கள் வரை இந்த வளைவு உயர்ந்து நிற்கிறது. 1750 டன்கள் எடையுள்ளது. இதனது விட்டம் ஏழு மீட்டர்கள். ஆக இந்த வளைவுக்கூடாக ஒரு புகைவண்டி போகலாம். 315 மீட்டர்கள் நீளத்திற்கு இந்த வளைவு வைக்கப் பட்டிருக்கிறது. 500 உருக்குக் குழாய்களைக் கொண்டு உருவானது. பாரிய இரு 70 டன் நிறையுள்ள பிணையல்களில் இது பொருத்தப் பட்டிருக்கிறது.


இந்த அரங்கத்தில் 90,000 இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. எந்த இருக்கையில் இருந்து பார்த்தாலும் முழு மைதானமும் மறைவின்றித் தெரியும். இதன் கூரை 52 மீட்டர்கள் உயரம் வரை இருக்கிறது. இந்தக் கூரையின் நிறை 7,000 டன்கள்! இம் மைதானத்தின் உள்ளே இரு புறத்திலும் உள்ள பாரிய இரு தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொன்றும் 600 சாதாரண தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவு. இதனுள்ளே 2,618 கழிப்பறைகள் இருக்கின்றன.


இதெல்லாம் சரிதான். ஆனால், இதனது வடிவமைப்பு ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு வடிவமப்பின் நகல் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1941ம் ஆண்டு பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கட்டிட நிபுணர் ஒஸ்கார் நீமெயர், பிரேசில் நாட்டு சர்வதேச அரங்கம் ஒன்றை வடிவமைத்தார். அதில் ஒரு பாரிய வளைவை நிறுவி வடிவமைத்தார். இந்த அரங்கம் கட்டப்படவேயில்லை. நோர்மன் ஃபொஸ்டர் வடிவமைத்த இந்த வெம்பிளி அரங்கம் ஏறத்தாழ அதை ஒத்திருக்கிறது! நோர்மன் ஃபொஸ்டர் திருடிவிட்டாரா என்பதைப் படங்களைப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.



(படங்கள்: இணையத்திலிருந்து)

உப்புள்ள பண்டம் குப்பையிலே

உப்புத் தூக்கலாக உள்ள உணவை உட்கொள்வது உடம்புக்குக் கெடுதலை விளைவிக்கும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். மைக்ரோவேவ் உணவுகளைத் தவிர்த்தாலும் கூட, உங்கள் உணவில் உப்பைத் தவிர்த்தாலும் கூட நாளாந்த உப்பு தேவையானதை விடக் கூடுதலாக இருக்க பெருமளவு வாய்ப்பு இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? சத்துள்ள உண்வு என்று நீங்கள் நம்பி வாங்கும் உணவுகளும், சாப்பிடும் போது உப்புத் தெரியவில்லை யெனினும், அளவுக்கதிகமான உப்பைக் கொண்டிருக்கின்றன.

உப்புக் குவியல்உப்பு என்பது சோடியம் குளோரட். இதிலுள்ள சோடியம் தான் உடம்புக்கு கேடு விளைவிக்க வல்லது. உப்பைத் தவிர உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கப்படும் மொனோ சோடியம் குளுடமேட், சோடியம் பைகாபனேட் போன்றவையும் சோடியத்தைக் கொண்டுள்ளன என்பதை நினைவில் வைத்திருங்கள். இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதில் சோடியம் பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ 12000 வருடங்களுக்கு முன்னர்தான் உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் வந்ததென்று அறியப்படுகிறது.

நாம் எல்லோருமே பொதுவாக 75% உப்பை கடைகளில் வாங்கும் தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களூடாகவே பெறுகிறோம். நீங்களே எல்லா உணவுகளையும் தயார்செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் பிஸ்கட்டையோ அல்லது ப்ரெட்டையோ கடையில் வாங்குவீர்கள். இவை அதிகளவு உப்பைக் கொண்டிருக்கக் கூடும்.

உப்பு அதிகமுள்ள உணவு வகைகள்:

  • Baked beans
  • Biscuits - sweet and savoury
  • Breakfast cereals
  • Cooking sauces
  • Hot chocolate
  • Pizza
  • Ready meals
  • Soup
  • Tinned spaghetti
  • Tinned vegetables and pulses (with added salt)

உப்பு அதிகமாக இருக்கக்கூடிய உணவு வகைகள்:

  • Anchovies
  • Bacon
  • Cheese
  • Chips (if salt added)
  • Crisps
  • Gravy granules
  • Olives
  • Pickles
  • Pretzels
  • Salted and dry roasted nuts
  • Salt fish
  • Sausages
  • Smoked meat and fish
  • Soy sauce
  • Stock cubes
  • Yeast extract


உப்புப் படிகம்இப்படிக் கூறியதற்காகவே மேற்சொன்ன உணவுப் பொருள்கள் எதனையும் சாப்பிட வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. அந்த உணவுப் பொருள்களிலுள்ள உப்பின் அளவை அவற்றில் குறிப்பிட்டுள்ளதை வாசித்து அறிந்து கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும்.

எவ்வளவு உப்பை ஒரு நாளுக்கு நாம் உட்கொள்ளலாம்? 6 கிராம். அதாவது ஒரு தேக்கரண்டியளவு உப்பு! இது ஒரு பெரிய அளவு இல்லை. அதிலும் 75% உப்பு நாளாந்த உணவுகளில் இருக்கிறதென்றால், இந்த அளவு மிகச் சிறியது. இது வளர்ந்தோர்களுக்குத் தான். பிள்ளைகளுக்கு வேறு அளவுகள் உள்ளன. பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு 1 கிராமிலும் குறைவானளவு உப்புத்தான் ஒரு நாளுக்குத் தேவைப்படும். இதைவிடக் கூடியளவு உப்பை அவர்களது கிட்னிகள் சமாளிக்க மாட்டா. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினாலோ அல்லது ஃபோமுலா பால் ஊட்டினாலோ தேவையானளவு உப்பு அவர்களுக்குப் போய்ச் சேரும். மேலதிக உப்பு அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அவர்களது உணவில் உப்புச் சேர்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்று தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருள்களைத் தவிர வேறு உணவுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அம்மாதிரியான உண்வுப் பொருள்களில் அதிகளவு உப்பு இருக்கக் கூடும்.

பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடிய உப்பின் அளவுகள்:

1-3 வயது: ஒரு நாளுக்கு 2 கிராம் உப்பு (0.8 கிராம் சோடியம்)
4-6 வயது: ஒரு நாளுக்கு 3 கிராம் உப்பு (1.2 கிராம் சோடியம்)
7-10 வயது: ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு (2 கிராம் சோடியம்)
11 வயது அல்லது அதற்கு மேல்: 6 கிராம் உப்பு (2.5 கிராம் சோடியம்)

இவை பிள்ளைகளுக்குக் கொடுக்ககூடிய ஆகக் கூடுதலான உப்பின் அளவு. இதை விடக் குறைவாகக் கொடுப்பதே நல்லது. பிள்ளைகளுக்கெனவே தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கூட வாங்குவதற்கு முன் அவற்றிலுள்ள உப்பின் அளவை அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் அதிகளவு உப்பு சாப்பிட்டு வந்தால் அது பிற்காலத்தில் பல உடல்நல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். மேலும், சிறுவயதிலேயே உப்புடன் சாப்பிட்டு ருசிப்பட்டுக் கொண்டால், வளர்ந்த பிறகும் அதிகளவு உப்பை அவர்கள் உட்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உப்புப் படிகங்கள்சரி. கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களிலிருந்து எப்படி உப்பின் அளவைத் தீர்மானிப்பது? பொதுவாக விற்கப்படும் எல்லா உணவுப்பண்டங்களிலும் 100 கிராமிற்கு இவ்வளவு உப்பு அல்லது சோடியம் இருக்கிறது என்று தந்திருப்பார்கள். 100 கிராமில் 1.25 கிராம் உப்பு (0.5 கிராம் சோடியம்) இருந்தால் அது "அதிகளவு" உப்பைக் கொண்டிருக்கிறது என்று கொள்ளலாம். 100 கிராமில் 0.25 கிராம் உப்பு (0.1 கிராம் சோடியம்) இருந்தால் அது "குறைந்தளவு" உப்பைக் கொண்டிருக்கிறது எனலாம். ஓர் உணவுப் பொருளில் 100 கிராமில் 0.25 கிராமிலிருந்து 1.25 கிராம் அளவுக்கு உப்பு இருந்தால் நடுத்தர அளவு உப்பைக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அதிகளவு உப்புள்ள (அதாவது 100 கிராமில் 1.25 கிராம் அல்லது அதற்குக் கூடுதலானளவு உப்புள்ள) உணவுப் பொருள்களைப் பெருமளவில் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இம்மாதிரியான பதார்த்தங்களை நிறைய சாப்பிடும்போது இலகுவாக 6 கிராமிற்கும் மேற்பட்ட உப்பை நாம் உட்கொண்டு விடுவோம். "மேலதிகமாக உப்புச் சேர்க்காதது" என்று குறிப்பிட்டிருக்கும் உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுங்கள்.

சோடியம் மாத்திரம் ஓர் உணவுப் பொருளில் குறிப்பிடப் பட்டிருந்தால், அந்த அளவை 2.5னால் பெருக்கினால் உப்பின் அளவு கிடைக்கும்.

நினைவிருக்கட்டும். உணவில் உப்பின் அளவைக் குறைக்கும் போது இரத்த அழுத்தம் குறைகிறது. இரத்த அழுத்தம் குறையும்போது இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைகின்றன. உங்களுக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் அதிகம் என்றால், சாப்பாட்டில் உப்பைக் குறைப்பதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தை சில வாரங்களிலேயே குறைத்துவிட முடியும்.

(படங்கள் இணையத்திலிருந்து)

குட்டையான ஆணே கவர்ச்சியானவன்!

நம்பினால் நம்புங்கள். உயரம் குறைந்த ஆண்களே பெண்களின் கண்களுக்குக் கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள். கால்கள் எந்தளவுக்குக் குட்டையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் பெண்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஒஸ்ட்ரலோபித்துகள்இதென்ன புதுக் கதை என்று யோசிக்கிறீர்களா? இது இப்போது அல்ல. இதெல்லாம் லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய கதை. ஏறத்தாழ 40 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்து 20 லட்சம் வருடங்களுக்கு முன்பு வரையான காலப் பகுதியில் காணப்பட்ட மனித ஆண்கள் குட்டையானவர்களாகவே காணப்பட்டனர். மனித முன்னோடிகளான ஹோமோக்களுக்கு நேரடியாக முன்னோடிகளான ஒஸ்ட்ரலோபிதகஸ் இனத்து ஆண்கள் 4 அடி 6 அங்குலங்களும் பெண்கள் 3 அடி 9 அங்குலங்களும் உயரமுடையவராகவே வாழ்ந்தனர். இதற்குக் கூறப்பட்ட காரணம் அந்நாளில் காடுகள் நிறைந்த உலகில் மரங்களில் ஏறி நிலை தடுமாறாது இருப்பதற்குக் குட்டையான கால்கள் அத்தியாவசியமானவை என்பதாகும். மிக உயரமான மரங்களில் திரிகின்றபோது கீழே விழுந்தால் மரணம் தான். எனவே உடலின் நிறை மையம் முடிந்தளவுக்கு நிலத்திற்குக் கிட்டவாக இருந்தால் (அதாவது கால்கள் குட்டையாக இருந்தால்) நிலை தளம்பாமல் மரங்களில் உலவ வசதியாக இருக்கும்.

மனிதன் தோன்றிய கிளையூட்டா பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் காரியர் இதை முழுமையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அவர் அண்மையில் இது தொடர்பாக எழுதியுள்ள ஓர் ஆய்வுக் கட்டுரையில், "இந்த ஒரு காரணமே கால்கள் குட்டையாயிருப்பதற்குப் போதாது" என்கிறார். "எதற்காக 20 லடசம் வருடங்களுக்கு ஒஸ்ட்ரலோபித்துகள் குட்டையான கால்களையே வைத்திருக்க வேண்டும்?", என்பது அவரது கேள்வி. இத்தனை மிக நீண்ட காலத்திற்கு ஒரு உடலுறுப்பின் தன்மை மாறாது இருக்கின்றதென்றால் அதற்கு வேறு ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டும். மேலும் "தற்போதைய வாலில்லாக் குரங்குகளை ஆராய்ந்தால், அவற்றின் கால்களும் குட்டையே. ஆனால் அவை மிகக் குறைந்தளவு நேரத்தையே மரங்களின் மேல் செலவிடுகின்றன."

ஒஸ்ட்ரலோபித்தின் மண்டையோடுபேராசிரியர் டேவிட் காரியர் கூறும் காரணமே வேறு: உடலின் நிறை மையம் முடிந்தளவுக்கு நிலத்திற்குக் கிட்டவாக இருந்தால் நிலத்தில் நிற்கும்போது உறுதியாக நிற்க முடிகிறது.
போட்டிக்காக அல்லது சண்டை என்று வரும்போது எதிராளியைக் கீழே வீழ்த்துவதற்கு உறுதியாக நிற்கும் குட்டைக் கால்கள் உதவுகின்றன. "கால்கள் குட்டையாக இருக்கும்போது, சண்டையிடும்போத உயாமான எதிராளியைத் தோற்கடிப்பது சுலபமாகிறது", என்கிறார் டேவிட் காரியர். இதுதான் பெண்களைக் கிறங்கடிக்க வைத்த ஆண்களது முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது.

ஒஸ்ட்ரலோபித்துப் பெண்இந்தப் புதிய எடுகோளை எப்படி இவர் முன்வைக்கிறார்? ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள், வாலில்லாக் குரங்குகள், பபூன்கள் எனப் பலதரப்பட்ட இனங்களிலிருந்து கால் நீளங்களையும் நிறைகளையும் எடுத்து, அவற்றினது சண்டையிடும் தன்மைகளை ஒப்பிட்டார். இதிலிருந்து, பின்கால்களின் நீளம் சண்டையிடும் தன்மைக்கு எதிர்மறையாகத் தொடர்பு டட்டிருப்பதாகக் கண்டுபிடித்தார். அதாவது, கால்களின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க, சண்டையிடும் தன்மை குறைந்து கொண்டு போவதை அவதானித்தார். கை நீளத்திற்கும் சண்டையிடும் தன்மைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் கண்டறிந்தார். மேலுள்ள இனங்களில் மனிதர்களைத் தவிர ஏனையவற்றில் ஆண்களை விட பெண்களின் கால்கள் நீளமானவையாகக் காணப்படுகின்றன.

கொரில்லாவின் எலும்புக்கூடுமனிதர்கள் மட்டும் ஒரு விசேட வகையாகி விட்டனர். சண்டை பிடிக்கும் தன்மை எவ்விதத்திலும் குறையாவிடினும், கால்கள் நீளமாகிவிட்டன. இது ஒரு வகையில் தவிர்க்க முடியாததாகி விட்டது. எப்போதுமே நிலத்துலேயே இருக்க ஆரம்பித்த பிறகு, ஆபத்திலிருந்து தப்பி ஓடுவதற்கும் வேட்டையாடுவதற்கும் வேகமாக ஓடுவதற்கு நீண்ட கால்கள் தேவைப்பட்டன. டேவிட் காரியரின் இன்னொரு ஆய்வில், குட்டையான ஒஸ்ட்ரலோபித்துகள் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட பின்னரே ஹோமோக்களானார்கள் (மனிதர்களது முன்னோடிகள்) என்று கூறியிருக்கிறார்.

(படங்கள்: இணையத்திலிருந்து)